வேலூர்: தமிழகம் முழுவதும் குற்றவாளிகளை விரைவில் அடையாளம் காண கைவிரல் ரேகை பிரிவில் ஆதார் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இது நடைமுறைக்கு வர உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக காவல்துறை சென்னை, சென்னை ஊரகம், மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் காவல்துறை ஆணையாளர்கள் தலைமையில் இயங்குகின்றது. தமிழகம் 32 காவல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இயங்குகின்றன. இதில் சட்டம்- ஒழுங்கு, மாவட்ட குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது. இதில் மிக முக்கிய பிரிவாக கை விரல் ரேகை பிரிவு உள்ளது.
திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போது சம்பவ இடங்களுக்கு கைவிரல் ரேகை பிரிவு போலீசார் சென்று அங்கு பதிவாகியுள்ள கைவிரல் ரேகையை சேகரிப்பார்கள். பின்னர், பழைய குற்றவாளிகளின் கை விரல் ரேகை பதிவுகளை ஒப்பிட்டு பார்த்து, ஏற்கனவே குற்றம் செய்தவர்கள்தானா? புதிய குற்றவாளிகளா? என்று கண்டறிவார்கள். இதற்காக கைவிரல் ரேகை பிரிவில் பல்வேறு ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு விரல் ரேகையை ஆய்வு செய்ய பல நாட்கள் ஆகும். காகித ஆவணங்களும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.