ஓசூர்: தமிழகத்தை கடந்து பிரமாண்ட பெருமாள் சிலை கர்நாடகா செல்வதற்கு தேவையான ஆயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றில் அமைக்கப்பட்டு வரும் மண்பாலம், திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் சிலை பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவுவதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கொரக்கோட்டை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 350 டன் எடை, 64 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பல்வேறு தடைகளை தாண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மண்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்த மண்சாலை உறுதியானதாக உள்ளதா என பொறியாளர்கள் ஆய்வு செய்த பின்பு, ராட்சத லாரியுடன் பிரமாண்ட பெருமாள் சிலையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.