ஆலந்தூர்: ஆலந்தூர் எம்.கே.சாலை - ரயில்வே ஸ்டேஷன் சாலை சந்திப்பில் அரைகுறை மழைநீர் கால்வாய் பணியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். சென்னை மாநகராட்சி 12வது மண்டலம், 160வது வார்டுக்கு உட்பட்ட ஆலந்தூர் எம்.கே.சாலை - ரயில்வே ஸ்டேஷன் சாலை சந்திப்பில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. அப்போது, ஒப்பந்ததாரர் சரிவர பணிகளை முடிக்காததால், ஆங்காங்கே பணிகள் அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, எம்.கே.சாலை - ரயில்வே ஸ்டேஷன் சாலை சந்திப்பு அருகே கால்வாய் கட்டுமான பணிகள் முழுமையாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளத்தில், பாதசாரிகள் அடிக்கடி தவறி விழும் சம்பவம் அதிகரித்து வந்தது.