புதுடெல்லி: ஐபிஎல் போட்டி நடைபெறும் நகரங்களில் இணைய வேகம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சென்னையில்தான் 4ஜி இணைய வேகம் அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கைக்கு ஏற்ப, மொபைல் இணைய பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அதிலும், ஜியோ அறிமுகத்தை தொடர்ந்து இந்தியாவில் 4ஜி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அபாரமாக உயர்ந்துள்ளது. நிறுவனங்களிடையே வர்த்தக போட்டியால் குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்படுவது இதற்கு முக்கிய காரணம். இந்தியாவில் 4ஜி பயன்பாடு மற்றும் வேகம் தொடர்பாக ஓபன்சிக்னல் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், ஐபிஎல் போட்டி நடக்கும் நகரங்கள் வாரியாகவும், ஒட்டு மொத்த அளவிலும் ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி ஹைலைட் வீடியோக்களை பலர் பார்ப்பதால், பயன்பாடு அதிகரித்துள்ளது.