ஷாருக்கான், ஆமீர்கானை தொடர்ந்து வாடகைத் தாய் குழந்தை மூலம் தந்தையாக மாற சல்மான் முடிவு

மும்பை: திருமணம் செய்து கொள்ள விரும்பாத பாலிவுட் நடிகர் சல்மான்கான், வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தந்தையாக திட்டமிட்டுள்ளார். நடிகர் ஷாருக்கானுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையிலும், அவர் மூன்றாவதாக வாடகைத்தாய் மூலம் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆனார். நடிகர் ஆமீர் கானும் தனது 2வது மனைவி கிரண் ராவுக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டதால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட பாலிவுட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. மேற்கண்ட பாலிவுட் பிரபலங்களை பின்பற்றி நடிகர் சல்மான் கானும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று தந்தையாக திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகை கத்ரீனா கைபுடன் நெருங்கி பழகினார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகின. ஆனால், அது குறித்து சல்மான் கானோ அல்லது கத்ரீனா கைபோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில், தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் ஆனால், ஒரு குழந்தைக்கு தந்தையாக விரும்புவதாகவும் அண்மையில் சல்மான் கான் தெரிவித்தார். அதன்படி, அவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சல்மான் கான் தற்போது கத்ரீனா கைபுடன் ‘பாரத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது.

Related Stories: