மதுரை: தலைமை தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக மாறியுள்ளது. அதிமுக, பாஜவின் முறைகேடு தொடர்பாக புகார் கொடுத்தால் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் தொடர்பாக நீதிமன்றத்தையே நாட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையம் பெரும் குழப்பத்தில் உள்ளது. மக்களையும் குழப்புகிறது. முதலில் 10 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என்றார்கள். பின்னர் 13 மக்களவை தொகுதியில் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறினர். தற்போது 13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த போவதாக அறிவித்துள்ளனர். தினந்தோறும் மாறி, மாறி பேசி வருவதால் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுகிறது. தேனிக்கு 50 வாக்கு இயந்திரங்கள் கொண்டு வந்ததிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இப்படி பல குழப்பமான சூழ்நிலையில் வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்த முடியும்? அன்றைய தினம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் கலந்த சூழ்நிலை உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இல்லாததால், அவரை உடனடியாக மாற்ற வேண்டும். சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.