வேலூர்: வேலூர் அடுத்த அமிர்தி வன உயிரியல் பூங்காவில் மான், மயில், பாம்பு உள்ளிட்ட விலங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவைகளை பார்க்க தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அமிர்தி சிறு வன உயிரியல் பூங்காவை, சிறு விலங்குகள் சரணாலயமாக மாற்றும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கை தயாரிக்க கோவையை சேர்ந்த முதுகெலும்பற்ற உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானி டேனியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். இந்நிலையில், அமிர்தி வன உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகளை கோடை காலத்தில் பாரமரிப்பது எப்படி? என்பது குறித்து வண்டலூர் வன உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவர் தயாசேகர் மற்றும் வேலூர் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது அமிர்தி வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.