நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில், நர்ஸ் உள்பட 3 பேரை 2நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நாமக்கல் கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து 3பேரையும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது சமீபத்தில் அம்பலமானது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜாசீனிவாசன், சேலம் டிஎஸ்பி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர், 8 சப் இன்ஸ்பெக்டர்கள் இந்த விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொல்லிமலையில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து நேற்று 2வது நாளாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சாரதா விசாரணை நடத்தினார். அப்போது கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட பிறப்புச்சான்றிதழ், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அவர் விசாரணை நடத்தினார். மேலும் கொல்லிமலையில் குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர்களிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர்கள் ஒரு குழந்தைக்கு ₹40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கிடைத்தது என கூறினர். இதே போல நாமக்கல்லில் டிஎஸ்பி ராஜாசீனிவாசன் தலைமையிலான போலீசார், கொல்லிமலை பகுதியில் உள்ள துணை சுகாதார நிலைய நர்ஸ்கள் 3 பேரை அழைத்து 2 மணி நேரம் விசாரித்தனர். அப்போது, கடந்த இரு ஆண்டுகளில் கொல்லிமலையில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக எதாவது புகார்கள் வந்ததா? என விசாரித்தனர்.