மும்பை: தங்களது நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, தங்களது வாடிக்கையாளர்களை பினாமி வங்கி கணக்கில் சிமென்ட் மூட்டைகளுக்கான பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறி பெரும் அளவில் பணம் மோசடி நடந்துள்ளது என்று சைபர் கிரைம் போலீசில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்களும் இது தொடர்பாக மும்பையில் எம்ஐடிசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பெயரில் ‘அம்புஜாசிமேன்ட்.இண்ட்.இன்’ என்ற பெயரில் போலியாக இணையதளம் ஒன்றை தொடங்கிய மோசடி பேர்வழிகள் அதன் மூலம் சிமென்ட் மூட்டைகளுக்கு ஆர்டர்கள் பெற்றுள்ளனர். பின்னர் சிமென்ட் மூட்டைகளுக்கான பணத்தை தாங்களது பினாமி வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். பணம் செலுத்தியவர்களுக்கு சிமென்ட் மூட்டைகள் உரிய நேரத்தில் சப்ளை செய்யப்படவில்லை. இதையடுத்து, பணம் செலுத்தியவர்கள் நிறுவனத்தை அணுகியபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்தனர்.