மும்பை: தண்ணீர் சேமிப்புக்காக 84 வயது முதியவர் ஒருவர் தனியாளாக போராடி வருகிறார். மகாராஷ்டிராவை சேர்ந்த ஆபித் சுர்தி(84) என்பவர் பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், பெயிண்டராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர் 80 புத்தகங்களை எழுதி இருக்கிறார். அதோடு தனது ஓவியங்களை 16 இடங்களில் கண்காட்சிக்கு வைத்துள்ளார். தற்போது தண்ணீர் சேமிப்புக்காக பாடுபட்டு வருகிறார். 2007ம் ஆண்டு ‘‘சேவ் எவரி டிராப் ஆர் டிராப் டெத்’’ என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஒவ்வொரு வீடாக சென்று தண்ணீர் சேமிக்கவேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து ஆபித் சுர்தி கூறியதாவது; எனது குழந்தை பருவத்தில் சால் வீடு ஒன்றில் வசித்து வந்தேன். காலையில் தண்ணீர் பிடிப்பது என்பது மிகவும் வேதனையானது. ஒரு வாளி தண்ணீருக்காக காலையிலேயே மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். இதனை தினமும் பார்த்து வந்தேன்.