சிவகிரி: குழந்தை பிறந்த 11வது நாளில் தந்தை ஊரணியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த உருக்கமான சம்பவம் வாசுதேவநல்லூர் அருகே நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் வாசுவேதநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் மகன் மாரிச்சாமி(32) கூலி தொழிலாளி. நேற்று மாலை வேலை முடிந்த பின் வெயில் களைப்பில் மாரிச்சாமி ஊரில் உள்ள ஊரணி திண்டில் படுத்து தூங்கினார். தூக்க கலக்கத்தில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்து விட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அப்படியே ஊரணில் மூழ்கி விட்டார். காயம் காரணமாக அவரால் எழுந்து வரமுடியவில்லை. அப்படியே மூர்ச்சையாகி ஊரணில் இறந்துவிட்டார். இதை பார்த்தவர்கள் உடனே வாசுதேவநல்லூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கலா, விஏஓ வீரசேகரன், தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கம் தலைமையில் வீரர்கள் ஆனந்தன், சந்தானபிச்சை, மாணிக்கம், முருகன், பெருமாள்சாமி, பொன்ராஜ், செல்வக்குமார், பாரதிராஜா ஆகியோர் வந்து மாரிச்சாமி உடலை தேடினர். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. நீண்ட தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.