சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருபுறமும் உள்ள இடங்களை சர்வே செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பூர் மற்றும் அயனாவரம் தாசில்தார்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வீனஸ், பெரவள்ளூர், ஜவஹர் நகர், பெரியார் நகர், கொளத்தூர் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளும், ஏராளமான வழிபாட்டு தலங்களும் உள்ளன. தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. பாதசாரிகள் கூட செல்ல முடியாத அளவில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. கடந்த 1986ல் இந்த சாலையை 70 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதுவரை சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. தற்போது சாலை 40 அடிக்கும் குறைவாக உள்ளதால் இருபக்கமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலையை விரிவாக்கம் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும், மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிட வேண்டும் என கோரி செம்பியம் திருவிக நகரை சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2012ல் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி அமல்படுத்தவில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் மீது வில்லியம் மோசஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.