சீசன் தொடங்கியும் பயனில்லை காய்ந்து கருகும் முந்திரி மரங்கள் விவசாயிகள் கடும் பாதிப்பு: ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படுமா?

கடலூர்: உலக அளவிலும், தேசிய அளவிலும் கடலூர் மாவட்டம் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. உலக முந்திரி சந்தையில் கடலூர் மாவட்டம் முதன்மை இடத்திலும், தமிழகத்தின் மிகப் பெரிய முந்திரி சந்தையாகவும் கடலூர் மாவட்டம் அமைந்துள்ளது. செம்மண் பூமி, தட்ப வெப்பநிலை என முந்திரி விளைச்சலுக்கு ஏற்ற இடமாகவும், முந்திரி பயிர்கள் இங்கு உலகத் தரத்தில் சிறந்தவையாகவும், சுவை மிகுதியாகவும் இருப்பது முதன்மை இடத்திற்கு காரணமாக உள்ளது.

இதனைக் காரணமாகக் கொண்டு பண்ருட்டி மற்றும் அதன் சார்ந்த பகுதியில் முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விடப்பட்ட அறிவிப்புகள் கானல்நீராகவே காட்சியளிக்கிறது. செயல்வடிவம் கிடைக்கப்பெற வேண்டிய வழிமுறைகள் கூட செயலற்று இருப்பதாக முந் திரி விவசாயிகள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 50,000 ஏக்கர் பரப்பளவில் முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. ஒரு லட்சம் தொழிலாளர்கள் முந்திரி சார்ந்த தொழிலை நம்பி உள்ளனர். மாவட்டத்தில் பிரதானமாக பண்ருட்டி பகுதியில் பணிக்கன்குப்பம், மேல் இருப்பு, கீழ் இருப்பு, சத்திரம், முத்தாண்டிகுப்பம், காட்டுக்கூடலூர், சாத்திப்பட்டு, சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, பத்திரகோட்டை, குறிஞ்சிப்பாடி பகுதியில் வேங்கடம்பேட்டை, புலியூர் காட்டுசாகை மற்றும் ராமாபுரம், எம்.புதூர், வெள்ளைக்கரை அதைத்தொடர்ந்து விருத்தாசலத்தில் பல பகுதிகளும் முந்திரி சாகுபடி அதிகளவில் உள்ளது.

டிசம்பர் மாதத்தில் முந்திரி பூ பூத்து பின்னர் பிஞ்சு விட்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அறுவடை தீவிரமாக நடைபெறுவது வழக்கம். முந்திரி விளைச்சலுக்கு ஏற்ற பருவமழை சாதகத்தின் தன்மையால் விளைச்சலின் அறுவடையும் அடங்கும்.

ஆனால் தானே புயலுக்கு பிறகு முந்திரி சீசன் மாறிவரும் தட்ப நிலையில் மடிந்து போகும் நிலையை கடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்த ஆண்டு பூத்துக்குலுங்க வேண்டிய முந்திரி காய்ந்து கருகி விவசாயிகள் நிலைபாட்டில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இதுகுறித்து மாம்பட்டு பகுதி முந்திரி விவசாயி எழிலிடம் கேட்டபோது, வழக்கமாக 8 முதல் 10 மூட்டை, ஒரு மூட்டை 80 கிலோ அளவிற்கு முந்திரி அறுவடை இருக்கும். ஆனால் நடப்பாண்டு ஐந்து மூட்டை கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. விலை ரூபாய் 10 ஆயிரத்து 500 அளவிற்கு ஒரு மூட்டை விற்பனையாகிறது. முந்திரி சாகுபடி மற்றும் அறுவடை தொடர்பான செலவில் இது கட்டுபடியாகாது. அடர்ந்த முந்திரி காடுகளை கொண்ட இந்த பகுதியில் முந்திரி விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் முந்திரி ஏற்றுமதி மண்டலம் அதை சார்ந்த தொழிற்சாலைகள் அமைந்தால்தான் 2 லட்சம் முந்திரி விவசாயிகள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்களுக்கு பலன் தரும். அந்த நாள் உதிப்பதற்கு காத்திருக்கிறோம் என்றார். முந்திரி மண்டலத்திற்கு முறையான தீர்வு காணவும், முந்திரி சாகுபடி மேலோங்கவும் அதை சார்ந்த நபர்களின் அரசியல் மற்றும் பொது சேவை ஈடுபாடு செயல்பாட்டிற்கு வழிகாட்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது அதற்கான நாளை எதிர்நோக்கி முந்திரி விவசாயிகளும் தொழிலாளர்களும் காத்திருக்கின்றனர்.

தொழிலாளருக்கு கைகொடுக்கும் இறக்குமதி

பண்ருட்டி மற்றும் அதை சார்ந்த பகுதி உலகளவில் முந்திரி உற்பத்திக்கு பெயர் பெற்றிருந்தாலும் இங்கு உள்ள விளைச்சல் இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் தொழிலதிபர்களுக்கு சில மாதங்கள் மட்டுமே பயன்தரும் வகையில் உள்ளது. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் முந்திரி தரம் பிரிப்பதில் முந்திரி காடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் தொழிற்சாலைகள் இயங்கவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பெறவும் இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டைகள்தான் வாழ்வாதாரத்துக்கு கைகொடுக்கிறது. அதற்கேற்ற வகையில் முந்திரி ஏற்றுமதி இறக்குமதி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: