பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் மீண்டும் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்துள்ளது. தனது கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் களமிறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 3ந் தேதி இந்தியாவில் கால் பதிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினமே, சிட்ரோன் பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சிட்ரோன் பிராண்டில் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரக காரை, இந்தியாவில் களமிறக்குவதற்கும் பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டுதான் இப்புதிய எஸ்யூவி ரக மாடல் உலக அளவில் வெளியிடப்பட்டது. இந்த எஸ்யூவி ரக கார், பிஎஸ்ஏ குழுமத்தின் EMP2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரக கார், இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வெளிநாடுகளில் 1.2 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.