சாம்ராஜ்நகர்: மைசூருவில் ஏப். 14-ம் தேதி நடைபெறும் பி.எஸ்.பி. தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவி மாயாவதி கலந்து கொள்கிறார். இந்த தகவலை முன்னாள் அமைச்சர் என்.மகேஷ் தெரிவித்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா குருபனகட்டே கிராமத்தில் பி.எஸ்.பி. கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் என். மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது நாட்டில் வறுமையை ஒழிக்க எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதே போல் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜவும் எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. இதனால் இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.