‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ கடுப்பேற்றிய பிரேமலதா : டென்ஷனான அதிமுகவினர்

புதுக்கோட்டை: திருச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்து புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: புதுக்கோட்டையில் இருந்துதான் ராணுவத்தில் அதிகமானோர் பணிபுரிவது பெருமைக்குரியது. இம்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். மாநில அரசும், மத்திய அரசும் இந்தக் கூட்டணியில்தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணியே வெற்றி பெறும். இந்த கூட்டணி மக்களுக்கு என்னென்ன செய்யும் என்று வாக்குறுதி அளித்து வருகிறது ஆனால்,  குட்கா புகழ் அமைச்சர் என்று விஜபாஸ்கரை ஸ்டாலின் சொல்கிறார். (இதை கேட்ட அதிமுக தொண்டர்கள் கடுப்பானார்கள். பிரேமலதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோபத்துடன் கோஷமிட்டனர். இதனால் அவரால் சிறிது நேரம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் சமாளித்துக் கொண்டு ெதாடர்ந்து பேசினார்.

பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால், அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூறமுடியுமா?. புல்வாமா தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியும், ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தும் அளவுக்கு நம் நாடு ராணுவ வலிமையோடு உள்ளது பிரதமரின் சாதனையாகும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டணியில் உள்ள மாநில அமைச்சரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் தினமும் ஏதாவது ஒன்றை உளறி புதிய புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இப்போது பிரேமலதாவும் புதிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். இதனால் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: