சென்னை: குடிபோதையால் ஏற்படும் குற்றங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வரும் 25ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவையை சேர்ந்த வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.