காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதில் கர்நாடக மாநிலம்தான் முதலிடம் என்கிறார்கள். தமிழகமும் அதற்கு சளைத்ததல்ல. ஓட்டுக்கு காசு வீசும் பழக்கம் நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே இருந்திருக்கிறது. எப்போதும் பொதுத் தேர்தலில் காசு புழக்கம் இருப்பதை விட இடைத் தேர்தலில் காசு புழக்கம் அதிக அளவில் இருக்கும். அதற்கு இடைத்தேர்தல் ஃபார்முலா என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். அதில் திருமங்கலம் இடைத் தேர்தலுக்கு முன்னோடிகளாக காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்கள் இருந்துள்ளன.வட மாநில கொள்ளையர்களால் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்டதாலும், காஞ்சிபுரம் எம்எல்ஏ எஸ்.எஸ்.திருநாவுக்கரசு உடல் நலக்குறைவினால் இறந்ததாலும் 2005ல் இடைத் தேர்தல் வந்தது. ஆளுங்கட்சியான அதிமுக இரண்டு தொகுதியையும் கைப்பற்றிட துடித்தது. அதனால் தேர்தல் அறிவிப்பு வந்ததும் அமைச்சர்களை 2 தொகுதியிலும் இறக்கிவிட்டது. அவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கட்சி பிரமுகர்களை உற்சாகப்படுத்துவது, சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனை என பிசியாக வலம் வந்தனர். ஆட்சி முடிய ஓராண்டே எஞ்சியிருந்த நிலையில் இடைத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி 2006 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஊக்கமாக இருக்கும் என்று அரசியல்கட்சிகள் வேகம் காட்டின.