சென்னை: குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பெங்களூரை சேர்ந்த பத்மாவதி (30) என்ற பெண் சுற்றுலா பயணிகள் விசாவில் குவைத் சென்றுவிட்டு திரும்பினார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரது உடைமைகளில் எதுவும் இல்லை. எனவே, பெண் சுங்க அதிகாரிகள் மூலம் பத்மாவதியை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். அவரது உள்ளாடையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்க கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து பத்மாவதியை கைது செய்தனர்.
மேலும், நேற்று காலை 8.30 மணிக்கு கொழும்பிலிருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. சென்னையை சேர்ந்த அகமது (24) இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பினார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில் அவரது ஆசன வாயில் ரப்பர் ஸ்பான்ச் சுற்றப்பட்டு தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 200 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.6.5 லட்சம். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ரூ.18.5 லட்சம் மதிப்புள்ள 550 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூர் பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி