கொல்கத்தா: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், நைட் ரைடர்ஸ் 28 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. கொல்கத்தா தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர். அறிமுக ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி வீசிய 2வது ஓவரில் சுனில் நரைன் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். அந்த ஓவரில் மட்டுமே 25 ரன் கிடைத்தது. கிறிஸ் லின் 10 ரன் எடுத்து ஷமி வேகத்தில் மில்லர் வசம் பிடிபட்டார். நரைன் 24 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வில்ஜோயன் பந்துவீச்சில் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா - நிதிஷ் ராணா ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 110 ரன் சேர்த்து அசத்தியது. ராணா 63 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி வருண் சுழலில் அகர்வாலிடம் பிடிபட்டார். அடுத்து உத்தப்பாவுடன் இணைந்த ஆந்த்ரே ரஸ்ஸலும் சிக்சர்களாகத் தூக்க, கொல்கத்தா ஸ்கோர் 200 ரன்னை தாண்டியது.