தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, பாஜ, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளராக புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக பொன்குமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்திலேயே மிகவும் பரபரப்பான தொகுதியாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி களம் காண்கிறது. திமுக தலைவராக இருந்து மறைந்த கருணாநிதியின் மகள் கனிமொழியும், பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரடியாக மோதுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த திமுக கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் திருச்செந்தூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.