ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11 முதல் 29ம் தேதி வரை சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நான்கு கட்டங்களாக நடக்கிறது. வேட்பாளர் தேர்வை சுமுகமாக முடித்தாலே போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டாராம் முதல்வரும், பிஜேடி கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதும், கட்சி நிர்வாகிகள் ஆளாளுக்கு சண்டை பிடிக்கிறார்கள். உருவ பொம்மை கொளுத்துகிறார்கள். உச்சகட்டமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாகவும் நாமினேஷன் கட்டி, மல்லுக்கு வருகிறார்கள். பாத் மாவட்டம், கந்தமால் பேரவை தொகுதிக்கு, சிட்டிங் எம்எல்ஏ மகிதர் ராணாவுக்கு மீண்டும் சீட்டு வழங்கினார் நவீன். இங்குதான் வெடித்தது பிரச்னை. ‘‘அந்தாள் ஒரு கரப்ஷன் பேர்வழி. அவரைப் பத்தி பல தடவை புகார் கொடுத்திருக்கிறோம். அவருக்கே திரும்பவும் சீட்டுனா எப்புடி... கட்சியில உழைச்சதுக்கு அப்புறம் என்னங்க மரியாதை...?’’ என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார் பிஜேடி தொகுதி நிர்வாகி சங்கர்சன் பிரதான்.