மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோகித், இது குறித்து கூறியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் நான் தொடக்க வீரராகக் களமிறங்க முடிவு செய்துள்ளேன். அதில் மிக உறுதியாக உள்ளேன். உலக கோப்பை தொடர் நெருங்கி விட்டது என்பதுடன், இந்திய அணியிலும் தொடக்க வீரராகவே விளையாடி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். முன் வரிசை வீரராக விளையாடும்போது தான் அதிக ரன் குவித்திருக்கிறேன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அணி நிர்வாகமும் இதை நன்கு உணர்ந்துள்ளது. நடு வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது, இந்த முடிவை எளிதாக்கிவிட்டது.