செய்யாறு: பருவ மழை பொய்த்ததால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீரின்றி மணிலா மட்டுமின்றி நெற்பயிர்களும் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக நம்பியிருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். மொத்த மக்கள் தொகையில், 80 சதவீத பேர் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளனர். ஆனால் போதிய மழையின்றி தொடர்ந்து கடும் வறட்சி நிலவிவருவதால் தற்போது விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 1,856 ஏரிகள் உள்ளன. அதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் 600, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் உள்ள ஏரிகள் 1,256. அனைத்து ஏரிகளும் போதிய மழையின்றி வறண்டு போயுள்ளன. சுமார் 1.86 லட்சம் விவசாய பாசன கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றதுடன், பெரும்பாலான கிணறுகள் வறண்டு போயுள்ளன. இத்தகைய கடும் வறட்சியால், விவசாயத்ைத மட்டுமே நம்பி வந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சையப்பன் நகரில் மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் மணிலா பயிரிட்டிருந்தனர். எப்படியும் வருண பகவான் கை கொடுப்பான் என்ற நம்பிக்கையில், கிணற்று நீரை நம்பி பயிரிடப்பட்ட மணிலா பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான மணிலா பயிர் கருகி போயுள்ளது.