மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படாததால், தேர்தல் உண்டா, இல்லையா என்ற சந்தேகம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க அன்று முதல் தமிழகம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலாகி 5 நாட்களாகியும் மயிலாடுதுறை தொகுதியில் இதுவரை வாகன தணிக்கை நடைபெறவில்லை. வழக்கமாக தேர்தல் சமயத்தில் மயிலாடுதுறையில் கால்டெக்ஸ் பகுதி, திருவாரூர் சாலை, தரங்கை சாலை, குடந்தை சாலை ஆகிய இடங்களில் வாகன தணிக்கை நடைபெறும். இப்போது இந்த இடங்களில் வாகன சோதனை நடைபெறாததால், மயிலாடுதுறையில் தேர்தல் பரபரப்பே ஏற்படவில்லை.