நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக சரக்கு வாங்கினால் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று பறக்கும்படையினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க முக்கிய தலைவர்கள் வந்தால் தொண்டர்களுக்கு கிடா விருந்து, மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் அரசியல் கட்சியினர் குவிந்துவிடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சரக்கு குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் இதற்கு முன்பு எவ்வளவு சரக்கு விற்பனையானது? தற்போது எவ்வளவு விற்பனையாகிறது? என்பது குறித்து தினமும் அறிக்கை தாக்கல் செய்ய ஒவ்வொரு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.