ஸ்டாக்ஹோம்: உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கி உள்ளது. இது மிகவும் நுட்பமான கணினி மொழிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். இது குறித்து ரோபோ வடிவமைப்பாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது: சுவீடனில் உள்ள படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 73 சதவீதம் பேர், பாலினம், வயது மற்றும் தோற்றம் போன்றவற்றால் பணி கிடைப்பதில்லை என தெரிவித்திருந்தனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் ‘எச்ஆர்’ பணிக்காக ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பெண்ணின் முக அமைப்பு கொண்டதாகும். இதற்கு தங்காய் என பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்களை போல் அல்லாமல், மிகுந்த நடுநிலை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுடன் மைக்ரோ போன் கொண்டு எளிதாக உரையாடவும், அதன் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இயலும்.