துவங்கும் முன்பே கண்ண கட்டுதே... ஒரே மாவட்டத்துக்கு 4 எம்பிக்கள்

புதுக்கோட்டை  மாவட்டத்துக்கு 4 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை மக்களவை தொகுதி 2004க்கு பிறகு மறு சீரமைப்பு என்ற  பெயரில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் அருகில் உள்ள மக்களவை  தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை சட்டமன்ற  தொகுதிகள் திருச்சி மக்களவை தொகுதியுடனும், விராலிமலை சட்டசபை தொகுதி,  கரூர் தொகுதியுடனும், ஆலங்குடி, திருமயம் சட்டசபை தொகுதி, சிவகங்கை தொகுதியுடனும், அறந்தாங்கி சட்டசபை தொகுதி,  ராமநாதபுரம் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால்  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 4 எம்பிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  இதனால் வாக்காளர்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலின் போதும் குழப்பம்  ஏற்படுகிறது. நான்கு தொகுதிகளிலும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ள  வெவ்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். விராலிமலை  சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்கள் கரூர் மக்களவை வேட்பாளர்களுக்கு  வாக்களிக்க வேண்டும்.

அதேபோல் புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை வாக்காளர்கள்  திருச்சி மக்களவை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். திருமயம்,  ஆலங்குடி, சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் சிவகங்கை மக்களவை  வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அறந்தாங்கி வாக்காளர்கள்  ராமநாதபுரம் மக்களவை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இதனால்  வாக்காளர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைதான் ஒவ்வொரு மக்களவை தேர்தலின்போது நடைபெறுகிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்த போதிலும் தேர்தல் ஆணையம்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: