தொடர் விபத்து எதிரொலி போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களுக்கு தடை?: மத்திய அரசு தீவிர பரிசீலனை

புதுடெல்லி: இரண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள், 5 மாதத்துக்குள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதை அடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துடன்,  விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று ஆலோசனை நடத்தியது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற  எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில்  157 பேர் பலியாயினர். அதன் கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், இந்தோனேஷியாவின் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளானது. 2 விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தை  சந்தித்துள்ளன. ஒரே மாதிரியான விபத்து என்பதால், விமானத்தின் வேகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தையடுத்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அனைத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தரையிறக்கியுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க  வேண்டாம் என உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா, இந்ேதானேஷியா உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் ‘போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இந்தியாவில் இயக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துடன் நேற்று ஆலோசனை  நடத்தியது. இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பெஸ் ஜெட் நிறுவனங்கள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் சிலவற்றை இயக்குகின்றன.  அதனால் இந்த நிறுவனங்களிடம் விமானத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம்  கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர போயிங் நிறுவனத்திடம் 225, ‘737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும், 205 விமானங்கள் வாங்க  ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. இவற்றில் 155 விமானங்கள் ‘737  மேக்ஸ் 8’ ரகத்தை சேர்ந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: