புதுடெல்லி: பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது பெட்ரோல் பங்க்குகளில் மாற்றப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டு எவ்வளவு என்று தெரியாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கருப்பு பணத்தை மீட்கும் நோக்கில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இது தவிர, பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், ரயில், பஸ் டிக்கெட், மின்சார கட்டணம் உட்பட 23 சேவைகளுக்கு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. 2016 நவம்பர் 25ம் தேதி முதல் ரூ.500 நோட்டு மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. டிசம்பர் 15ம் தேதி வரை இந்த அனுமதி இருந்தும், முறைகேடு புகார்களை தொடர்ந்து டிசம்பர் 2ம் தேதியோடு ரூ.500 பயன்படுத்தவும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் பங்க், ரயில், பஸ் டிக்கெட்கள் உட்பட மேற்கண்ட 23 சேவைகளில் மாற்றப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.