புதுடெல்லி : தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை, பாலங்கள், மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகள் விளம்பர பலகை வைப்பதற்கு எதிராக யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” நெடுஞ்சாலை, பாலங்கள், சாலையின் இருபகுதிகள், மலை மற்றும் வனப்பபகுதி ஆகிய இடங்களில் விளம்பர பலகை வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. அதேப்போல் மலை, வனப்பகுதியிலும் விளம்பர பலகைகள் வைப்பதாலும் விலங்குகள் அதிகம் பாதிப்படைகின்றன. அதனால் இது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சட்டவிதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தலைமை தேர்தல் ஆணைத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தமிழகத்தில் சட்ட விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியின் ஆதாரங்கள் கொண்ட படங்களை நீதிபதிகள் முன்னிலையில் சமர்பித்தார்.
