கவுகாத்தி: இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, கவுகாத்தி பர்சபாரா ஸ்டேடியத்தில் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 161 ரன் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறியதால் தோல்வியைத் தழுவியது. தியோல் 8, கேப்டன் மந்தனா, ஜெமிமா தலா 2 ரன், அனுபவ வீராங்கனை மித்தாலி ராஜ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி கட்டாயம் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்குகிறது.