சென்னை: மனசாட்சியை விற்றுவிட்டு அதற்கொரு விலைவைத்து கூட்டணி வைத்துள்ளவர்களை ஜனநாயகம் என்ற ஆயுதம் கொண்டு விரட்டியடிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவை 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜ கூட்டணியின் கொடுங்கோன்மை ஆட்சியில் நாடு பட்டபாட்டிலிருந்து மீட்கவும், அந்த கொடுங்கோல் ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்து தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, இன்று அவர்களுடனேயே கூட்டணி கண்டுள்ள அதிமுக ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டின் மானத்தை மீட்டு, அதல பாதாளத்திலிருந்து விடுவிக்கவும் ஜனநாயகக் களமான மக்களவைத் தேர்தல், திமுக செயல்வீரர்களைப் பட்டாளத்துச் சிப்பாய்களாக மாற்றியிருக்கிறது. இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி விருதுநகரில் மார்ச் 6ம் நாள் நடைபெறவிருக்கிறது. ‘மார்ச்’ என்ற ஆங்கிலத் சொல்லுக்கு வீறுநடை என்பதே பொருளாகும். ஆறு போல பெருக்கெடுக்கும் வீறுநடையை மார்ச் 6ல் விருதுநகரில் காட்டிடவும், அதனை வெற்றி நடையாக மாற்றிடவும் கலைஞரின் தொண்டர்களை உங்களின் ஒருவனான நான் அன்புடன் அழைக்கிறேன். விருதுநகரில் உங்களில் ஒருவனாக என்னையும் வரவேற்றிட, விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆயத்தமாக இருக்கிறார்கள். திமுக தனது தோழமை சக்திகளுடன் இணைந்து காணப்போகும் மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர் பேரணி அமையப் போகிறது. பொதுமக்களும் பங்கேற்கும் பெரும் பேரணியை விருதுநகர் தனது வரலாற்றுப் பக்கங்களில் மார்ச் 6ம் நாள் பதிய வைக்கப் போகிறது. திமுகவும், காங்கிரசும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு செய்து கொண்ட நிலையில், தோழமைக் கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற, சிறுபான்மை நலன் காக்கின்ற, ஒடுக்கப்பட்டோர் உரிமையைப் பாதுகாக்கின்ற, யாரையும் ஒதுக்கி வைக்காத, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற கொள்கைக் கூட்டணி. மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி.