நெல்லை: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாடாளுமன்ற தேர்தல்-2019 பிரச்னைகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் சந்திப்பு பிரசார பயணம் நடத்தப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை அருகே இருந்து துவங்கிய பிரசார பயணக்குழுவினர் நெல்லை வந்தனர். நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் பிரசாரம் செய்தனர். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து வந்துள்ளது. கஜா புயல் பாதிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் தொடர்ந்து ஏற்பட்ட போதும், தமிழகத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதனை அதிமுகவை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையே கூறியிருக்கிறார்.