நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் படுத்து தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் கூட்டத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு கலெக்டர் வெளியேறினார்.நாகை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவல கூட்ட அரங்கில் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. வருவாய் அலுவலர் இந்துமதி, கலெக்டரின் அறிக்கையை வாசிக்க தொடங்கினார். அப்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் குறுக்கிட்டு, `நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாள் காத்திருந்து நெல்லை விற்றோம். நெல்லுக்கு ஒரு மாதமாக பணப்பட்டுவாடா செய்யவில்லை’ என்றார். அதை ஆதரித்து பெரும்பாலான விவசாயிகள் எழுந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.