வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சதத்தை எட்டியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஜூஸ் கடைகளில் குவிந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் மனிதர்களை வாட்டி வதைக்கும் நிலையில், கால்நடைகளும் பாதிப்பிற்கு ஆளாகிறது. இத்தகைய பாதிப்புற்கு வெப்ப அழற்சி என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெப்ப அழற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேலூர் மண்டல கால்நடை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: கோடை காலத்தில் வெப்ப அழற்சி பாதிப்பு கால்நடைகளை வெகுவாக பாதிக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்ட அரைமணி நேரத்தில் கால்நடைகள் மயங்கி விழுந்து மூச்சு இரைப்புடன் இறக்க நேரிடும். குறிப்பாக கறவை மாடுகளுக்கு இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படும். வெயில் காலத்தில் கால்நடைகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது. கால்நடைகளை வெயிலில் கட்டிவைத்து மேய்ச்சலுக்கு விட்டால் பால் உற்பத்தி வெகுவாக குறையும்.