செக் ரிடர்ன் வழக்கில் ஆஜராகாத நடிகர் நெப்போலியனுக்கு பிடிவாரன்ட்...கரூர் கோர்ட் உத்தரவு

கரூர்: செக் ரிடர்ன் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் நெப்போலியனுக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(44). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில், படம் ரிலீஸ் சமயத்தில், கோபாலகிருஷ்ணனுக்கு ரூ.53 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பாக்கி வரவேண்டியிருந்தது.

இதனால் சென்னை சென்று பாக்கி பணத்தை கோபாலகிருஷ்ணன் கேட்ட போது, அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் நெப்போலியன், பணத்தை திருப்பி தருவதற்கு அவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், முதலில் ரூ.25  லட்சம் வழங்கியதாகவும், மீதித்தொகையான ரூ.28 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு செக் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் பணம் இல்லாமல் செக் ரிடர்ன் ஆனதால், கோபாலகிருஷ்ணன் கரூர் விரைவு  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் நெப்போலியன் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி ரகோத்தமன், நெப்போலியனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: