பாலக்கோடு : காதல் திருமணம் செய்து, கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய போலீஸ் எஸ்ஐயுடன் சேர்த்து வைக்கக்கோரி, பாலக்கோடு காவலர் குடியிருப்பு முன்பு,நிறைமாத கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை 5.30 மணியளவில், நிறைமாத கர்ப்பிணியான சத்யா(33) என்பவர் வந்தார். அவர் போலீசாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியில் வசிக்கும் நானும், உறவினரான சீனிவாசன்(38) என்பவரும் கடந்த 2007ம் ஆண்டு காதலித்தோம். இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு கிருஷ்ணகிரி முருகன் கோயிலில் வைத்து, என்னை ரகசிய திருமணம் செய்து கொண்ட அவர், கிருஷ்ணகிரி பவர் ஹவுஸ் காலனியில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்தார். இதனிடையே, அவருக்கு 2010ம் ஆண்டு எஸ்.ஐ.,யாக வேலை கிடைத்து, பாலக்கோட்டில் பணிக்கு சேர்ந்தார். கடந்த ஆண்டு நான் கர்ப்பிணி ஆனேன். அதன் பிறகு அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சரிவர வீட்டுக்கு வரவில்லை. செல்போனிலும் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த நான், விசாரித்தபோது, பாலக்கோட்டில் வேலை பார்த்த போது, எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, என்னை அலட்சியம் செய்ததோடு, மிரட்டல் விடுத்தார். இதுபற்றி, தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த நான், கடந்த திங்கட்கிழமை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடமும் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவர் சீனிவாசன், தற்போது தர்மபுரி நகர் பி1 காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணி புரிந்து வருகிறார். எனவே, எனது புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்.