புதுடெல்லி : தேசிய தலைநகரை மீரட் நகருடன் காஜியாபாத் வழியாக இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் எனப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து திட்டத்துக்காக மத்திய அரசு 30,274 கோடிக்கு அனுமதி தந்துள்ளது. டெல்லியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருடன் காஜியாபாத் வழியாக இணைக்கும் வகையில் விரைவு போக்குவரத்து சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் நீளம் 82 கிலோ மீட்டராகும். இதை 1 மணி நேரத்தில் விரைவாக கடந்து விடலாம். ஆர்ஆர்டிஎஸ் என்பது ரயில் அடிப்படையிலான அதிவிரைவு பிராந்திய போக்குவரத்து முறையாகும். இந்தியாவில் முதல் முறையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்துக்கு டெல்லி ஆம் ஆத்மி அரசு அதன் பங்களிப்பை தராமல் இழுத்தடிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முடிவான திட்டம் இன்னும் உருபெறவில்லை. இந்நிலையில் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்துக்கு ₹ 30,274 கோடியை ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆர்ஆர்டிஎஸ் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இந்த திட்டத்தின் தொலைவு 82.15 கிலோ மீட்டராகும்.