சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் படிப்படியான மதுவிலக்கு கொள்கைப்படி, மதுவிலக்கை அமல்படுத்தும் கால அட்டவணை வெளியிட வேண்டும். பணியில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் போது உருவாகும் உபரிப் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தர மாற்றுப்பணி வழங்க வழிவகை செய்யும் அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை சந்திக்க வரும் 19ம் தேதி சென்னையில் காத்திருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.