சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 224 உயர்ந்தது. வரும் நாட்களில் இன்னும் தங்கம் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறினர். தங்கம் விலையில் ஜனவரி மாத தொடக்கத்தில் ஏற்றம், இறக்க நிலை காணப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மாத இறுதியில் சவரன் 25 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்த மாதம் 1ம் தேதி ஒரு சவரன் 25,448க்கு விற்பனையானது. தொடர்ந்து, தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 3,145க்கும், சவரன் 25,160க்கும் விற்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 28 அதிகரித்து ஒரு கிராம் 3,173க்கும், சவரனுக்கு 224 உயர்ந்து ஒரு சவரன் 25,384க்கும் விற்கப்பட்டது.
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 224 அளவுக்கு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மேலும் தங்கம் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அமெரிக்காவின் பொருளாதாரம் ெபரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பெரும் முதலீட்டாளர்கள் வர்த்தகம் போன்றவற்றில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். தற்போது அவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை உயரத்தான் அதிக வாய்ப்புள்ளது. இந்த மாதம் முழுவதும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்க நிலைதான் நீடிக்கும் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி