புதுடெல்லி: திவால் நிலையை எட்டியுள்ள ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பிஎப் பணத்தின் கதி என்னவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஐஎல்எல் அண்ட் எப்எஸ் பைனான்ஷியல் நிறுவனம் இந்த நிறுவனம், எல்ஐசி, ஜிஐசி, யுஐஐ, என்ஐசி உள்ளிட்ட 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிதிச் சேவை அளித்து வந்தது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வணிக பத்திர முதலீடுகளை முதிர்வு நாளுக்குள் வழங்குவதில் சிக்கலை சந்தித்தது. பல கடன் பத்திரங்களின் முதலீட்டையும் இந்த நிறுவனத்தால் திருப்பி செலுத்த இயவில்லை. சுமார் 90 நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த நிறுவனத்தின் கடன் தொகை சுமார் ரூ.90,000 கோடி. இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கும் குறைக்கப்பட்டு விட்டதால் தற்போது, இந்த நிறுவனத்தில் பிஎப் பணத்தை முதலீடு செய்த நிறுவனங்களும் கலக்கத்தில் இருக்கின்றன.
ஐஎல் அண்ட் எப்எஸ் பத்திரங்களில் பல ஆயிரம் கோடி பிஎப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கம்பெனி திவால் நிலைக்கு சென்றுள்ள நிலையில், இதில் உள்ள பணம் என்ன ஆகுமோ என்ற அச்சம் இதில் முதலீடு செய்த நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ளது. தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த அச்சத்தை பிஎப் மற்றும் ஓய்வூதிய அறக்கட்டளைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. எம்எம்டிசி, இந்தியன் ஆயில், சிட்கோ, ஹட்கோ, ஐடிபிஐ, எஸ்பிஐ மற்றும் குஜராத், இமாசல பிரதேச மின் வாரியங்கள் ஆகிய ஊழியர்களின் பிஎப் பணத்தை நிர்வகிக்கும் பிஎப் அறக்கட்டளைகளும் கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் இதுதொடர்பாக மனு செய்திருக்கின்றன. நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து பிஎப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதி பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் கிடைக்கும் லாபம்தான் பிஎப்சந்தாதாரர்களுக்கு வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த வகையில்தான் எஎல் அண்ட் எப் எஸ் நிறுவனத்திலும் பிஎப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பல ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டதோடு, கடனாகவும் வழங்கப்பட்டுள்ளன. முதலீடு எந்த அளவுக்கு அபாய நிலையில் உள்ளது என்றோ, எவ்வளவு பிஎப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றோ சரியான புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் பிஎப் நிதி முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி