மாஸ்கோ: அணு ஏவுகணை தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க கூறியதையடுத்து, இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்திக்கொள்வதாக ரஷ்யாவும் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் கடந்த 1987ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கும் அணு ஏவுகணைகளை இரு நாடுகளும் தயாரிப்பதற்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் (ஐஎன்எப்) அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனும், ரஷ்ய அதிபர் கோர்பசேவும் கையெழுத்திட்டனர். ஆனால். இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா அணு ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை மறுத்து வந்த ரஷ்யா, நிருபர்களையும், நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளையும் அழைத்து விளக்கம் அளித்தது. அப்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், தடை செய்யப்பட்ட அணு ஏவுகணைகளை ரஷ்யா மீண்டும் தயாரிக்கும் என புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.