திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மிகவும் பழுதடைந்த, சீரமைக்க இயலாத மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறை கட்டிடங்கள் குறித்து ஓராண்டுக்கு முன் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் 40 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்களாகும். குறிப்பாக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியானது ஆபத்தான கட்டிடங்களில், இடநெருக்கடியில் இயங்கி வருகிறது.இங்குள்ள தலைமை ஆசிரியர் அறை மற்றும் மாணவர்கள் வகுப்பறையில் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து திடீரென கீழே விழுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நாகை மாவட்டம், பொறையாரில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஓய்வறை இடிந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் துறைகள் வாரியாக ஆபத்தான கட்டிடங்கள் குறித்து கணக்கெடுத்து அகற்ற அரசு உத்தரவிட்டது.