வாஷிங்டன்: வெனிசுலாவின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளை தடை செய்து ராணுவத்தின் துணையுடன் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நிக்கோலசை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் குடோ, தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு தலைமறைவாக இருந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்.
குடோவுக்கு அமெரிக்கா, கனடா ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும், நிக்கோலசை பதவி விலக நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இதற்கு அவர் உடன்பட அவர் மறுத்து வருகிறார்.இதனால், நிக்கோலசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக, வெனிசுலா மீது பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கத் தொடங்கியுள்ளது. இதில், முதல் நடவடிக்கையாக அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ள அரசின் பெட்ரோலிய நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பொருளாதார தடை விதித்தார். இந்த பொருளதாரத் தடையால் அமெரிக்காவிற்கான எண்ணெய் ஏற்றுமதியும் தடுக்கப்படும். இதனால், அடுத்தாண்டில் வெனிசுலாவுக்கு ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
ராணுவத்தை அனுப்பவும் திட்டம்:வெள்ளை மாளிகையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜான் போல்டன் அளித்த பேட்டியில், ‘‘நி்க்கோலசின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பவும் அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி