ஊட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதி காவலாளி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில், 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். நாளடைவில், 10 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, கொடநாடு சம்பவத்தில் முதல்வர் பழனிசாமிசொன்னதன் பேரில்தான் ஆவணங்களை எடுக்க சென்றதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக கொலை நடந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் டெல்லியில் தமிழக போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுத்ததால் ஜாமீனில் உள்ளனர். இதைத்தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்யும்படி அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வடமலை, இருவரையும் 24ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.