சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் டிடிவி தினகரன் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அமமுக சார்பில் கடந் தஏப்ரல் மாதம் கரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு பாஜவுக்கு கைப்பாவையாக இருப்பதாக கூறியிருந்தார் டிடிவி தினகரன். கரூர் மாவட்ட முதன்மை அரசு வக்கீல் இதற்காக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிமன்றம் டிடிவி தினகரனை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. டிடிவி டிடிவிதினகரன் நேற்று ஆஜரானார். அப்போது நீதிபதி சாந்தி வழக்கு ஆவணங்களின் நகலை அளித்தார். பின்னர் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார். பின்னர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. நாங்கள் தேர்தலுக்கான பணிகளை 6 மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டோம். கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறோம், பிரதமர் மோடியின் வருகையை தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.