சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.சேலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் காவல் பணியை ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 290 பெண்கள், 370 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர், ஒதுக்கிய பணிகளுக்கு மாறாக, நோயாளிகளிடம் பணம் பறிப்பதாக புகார் எழுந்தது. அதிலும், குறிப்பாக பிரசவ வார்டில் ஆண் குழந்தை பிறந்தால் ₹500, பெண் குழந்தை பிறந்தால் ₹300, நோயாளிகளை வீல்சேர் அல்லது ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல ₹100, சாப்பாடு டோக்கன் பெற்றுத்தர ₹50 என வசூல் செய்துள்ளனர்.
அவர்களை ஒரே வார்டில் தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்வதால், வசூல் வேட்டை நடப்பதோடு, மருத்துவமனை நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுதாக புகார் எழுந்தது. இதையடுத்து மருத்துவமனை டீன் (பொ) ராஜேந்திரன், ஒப்பந்த நிறுவனம் மற்றும் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் எதிரொலியாக, டீன் ராஜேந்திரன், ஒப்பந்த நிறுவன சேர்மன் பாஸ்கர நாயுடு, பாதுகாப்பு அலுவலர் கரிகாலன் ஆகியோர் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஒப்பந்த ஊழியர்கள் அண்ணாமலை, குப்பம்மாள், பழனியம்மாள், கவிதா ஆகியோர் நோயாளிகளிடம் பணம் வசூலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4பேரையும் பணி நீக்கம் செய்தனர். இதுகுறித்து டீன் ராஜேந்திரன் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மீது புகார் வந்தால் உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி