வேலூர்: வேலூர் அடுத்த அமிர்தியில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இவைகளை பார்த்து ரசிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று பராமரிப்பு பணி காரணமாக விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரும் செவ்வாய்க்கிழமையான நாளை மறுநாள் கொண்டாடப்படுவதால் அன்று அமிர்தி வன உயிரியல் பூங்கா திறந்திருக்கும். அசம்பாவிதங்களை தடுக்க வனத்துறையினர் 40 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர ஜம்னாமரத்தூரில் இருந்து எஸ்ஐ தலைமையில் 10 போலீசாரும், வேலூர் ஊர்க்காவல் படையை சேர்ந்த 15 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே, 13 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அமிர்தி வன உயிரியல் பூங்கா தீவிரமாக கண்காணிக்கப்படும்’ என்று அமிர்தி வனச்சரகர் சரவணன் தெரிவித்தார்.