சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோர் 7 தமிழர் விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யவேண்டும் என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இதுவரை, 7 பேர் விடுதலை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதுதான் மரபு, அந்த மரபை கவர்னர் அவமதித்துள்ளார். 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முஸ்லிம் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக பேரவையில் பேச அனுமதி கேட்டோம், அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்றனர்.